பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பதவியைப் பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரிய வந்ததால் விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருத்தங்கல் நகர் மன்ற துணைத் தலைவராகப் பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 26 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.