இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரையும் ஆகஸ்ட் 27 -ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் செவ்வாய்க்கிழமை இரவு அடைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்துச் சென்றனர்.
இதனையடுத்து, அந்தப் படகை பறிமுதல் செய்த அவர்கள், அதில் இருந்த மீனவர்கள் கிகிங்கர் (45), வில்லர் (48), நெல்சன் (27), இன்னாசி உள்ளிட்ட 7 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி யாழ்ப்பாணம் நீரியல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப் பின் அரசு நீதிபதி ஜூட்சன் வீட்டில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, மீனவர்களை ஆகஸ்ட் 27 -ஆம் தேதி வரை சிறையில் நீதிபதி அடைக்க உத்தரவிட்டார். அதையடுத்து, அன்று இரவு 7 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.