சாதி, மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கையில் வண்ண நிற கயிறுகளை கட்டி வரக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அனுப்பிய சுற்றறிக்கை இன்று வரை சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
முன்னதாக, இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தான் தெரிவித்த கருத்தை இன்று மாற்றிக் கொண்டிருப்பது அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நாட்டின் 73-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரணர் இயக்க தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக்கயிறு கட்டுவது குறித்த சுற்றறிக்கை விவகாரத்தில் அரசின் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
எது நடைமுறையில் இருக்கிறதோ அதைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை என்றார்.
மேலும், எனது கவனத்துக்குக் கொண்டு வரப்படாமலேயே, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுவிட்டதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பள்ளிகளில் சாதி, மத அடையாளங்கள் உள்ளது என்று கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்துள்ளார்.