மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அவர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சேலம் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சைக்காகத் தனிப்பிரிவு அமைக்கப்படும். காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன. தமிழகத்தில் 2,000 சிகிச்சை மையங்களில் காய்ச்சல் பாதிப்பு குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.