வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரங்களுக்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென் மேற்குப் பருவக்காற்றின் தாக்கம் ஆகியவை காரணமாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் இதரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரியில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. தென் கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க தடையில்லை.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரங்களில் அதிகபட்சமாக வேலூரில் 17 செ.மீ. மழைப் பதிவானது. கடலூரில் 13 செ.மீ., அரியலூரில் 12 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 11 செ.மீ., விழுப்புரத்தில் 10 செ.மீ. மற்றும் சென்னையில் 2 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.