கொல்லிமலையில் பெய்து வரும் மழையின் காரணமாக, அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் காட்சியைப் பார்ப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
கொல்லிமலையின் அழகையும், சீசனையும் அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகள், 1,300 படிகளைக் கடந்து சென்று இந்த நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்வர். கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் நீர்வரத்தின்றி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பாறைகளாகக் காட்சி அளித்தது. இதையடுத்து, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதை, கடந்த ஜூலை 2-ஆம் தேதி மூடப்பட்டது. தண்ணீர் இல்லாததால், யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு பெய்த மழையால் ஜூலை 27-இல் பாதை மீண்டும் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அருவியில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் சென்று வந்தனர்.