கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆக.26 முதல் தொடக்கம்

தமிழகம் முழுவதும் சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில்,  கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு, வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.


தமிழகம் முழுவதும் சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில்,  கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு, வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புதிய கல்வித் தொலைக்காட்சி சேனலைத் தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான முன்தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிக்கட்டமாக நிகழ்ச்சிகளுக்கான படப்படிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து கடந்த சில நாள்களாக தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. 
இந்தப் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், கல்வித் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு ஆக.26-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைக்கவுள்ளார்.  
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:  இந்த சேனலில் 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு நிகராக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அரசின் புதிய திட்டங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத்தேர்வு குறித்த விளக்கங்கள், புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் நேர்காணல், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக்கான முக்கிய சுற்றறிக்கைகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.
அரசு கேபிளில்...: இதன் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.  நீட் உட்பட போட்டித் தேர்வுக்கான பயிற்சியும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட சூழலில், அரசு கேபிளில் 200-ஆவது அலைவரிசையில் கல்வி தொலைக்காட்சி சேனல் சோதனை ஒளிபரப்பு ஆக.26-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.  
53 ஆயிரம் பள்ளிகளில் ஏற்பாடு: 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வகுப்புக்கான ஒளிபரப்பை அந்த வகுப்பு மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறுவர். மீண்டும், மாலையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதால் வீட்டில் சென்றும் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்த்து பயன்பெற முடியும். 
இது, இந்திய அளவில் கல்வித் துறையின் முன்னோடி திட்டமாக அமையும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதற்கான படப்பிடிப்புத் தளம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நுôலகத்தின் எட்டாவது தளத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com