தமிழகத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பழனிசெட்டிபட்டி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், அரசுத் துறைகள் சார்பில் 702 பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம், 37 மகளிர் சுயஉதவிக் குழுக்கள், 5 சுயஉதவிக் குழு கூட்டமைப்புகளுக்கு சுழல் நிதி, 177 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆகியவற்றை வழங்கி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியது:
தமிழகத்தில் குடிசை வீடுகளே இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதற்காக, ஏழை குடும்பங்களுக்காக மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடித்து வழங்கப்பட்டுள்ளன. வரும் 2023-ஆம் ஆண்டிற்குள் குடிசை வீடுகளில் வசிக்கும் அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
தேனி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் அரசு பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், மருத்துவக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. விரைவில் அரசு சார்பில் சட்டக் கல்லூரியும் தொடங்கப்பட உள்ளது என்றார்.
பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியர் ஜெயப்பிரித்தா, உதவி ஆட்சியர்கள் (பயிற்சி) எஸ்.பாலச்சந்தர், ஆர்.நிறைமதி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சிவக்குமார், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன், முன்னாள் எம்.பி. ரா. பார்த்திபன், அதிமுக மாவட்டச் செயலர் சையதுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.