ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த 2010-ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என்று இருந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஜூன் 8-ஆம் தேதி நடந்த முதல் தாள் தேர்வை தமிழகம் முழுவதும் 1,83,341 பேர் எழுதினர். சென்னையில் 20 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 481 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.