நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதி நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதி நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும்  நளினி, தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக 6 மாதம் பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  இந்த வழக்கு விசாரணையின்போது சிறை விதிகளின்படி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்குவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.  

இந்த நிலையில் தனக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் வழங்க கோரி நளினி, தமிழக சிறைத் துறைக்கு கொடுத்த கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.ராதாகிருஷ்ணன், நளினியின் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்தும், இலங்கையில் இருந்தும் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தான் தமிழகத்துக்கு வருகின்றனர். அவர்கள் வந்த பின்னர் தான் திருமணம் குறித்து பேச முடியும். எனவே நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி வாதிட்டார்.  

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு வரும் வியாழக்கிழமைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் தீர்ப்பும் அன்றைய தினமே பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர். இந்நிலையில் இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com