கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இங்கு ஆவணி, வைகாசி, தை மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதல், தொடர்ந்து விளக்கேற்றுதல், காலை 5 மணிக்கு சிறப்பு பணிவிடை, அதிகாலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரித்தலைத் தொடர்ந்து திருக்கொடியை பாலஜனாதிபதி ஏற்றினார். ராஜவேல், பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன்.ரகு, ஜனா. யுகேந்த், ஜனா. வைகுந்த், பால. பிரசாத், நேம்ரிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காலை 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம், இரவு 8 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியைச் சுற்றி பவனி வருதல் ஆகியவை நடைபெற்றன.
இரண்டாம் நாள் இரவு அய்யா பரங்கி நாற்காலி வாகனத்திலும், மூன்றாம் நாள் அன்ன வாகனத்திலும், நான்காம் நாள் பூஞ்சப்பர வாகனத்திலும், ஐந்தாம் நாள் மயில் வாகனத்திலும், ஆறாம் நாள் கற்பக வாகனத்திலும், ஏழாம் நாள் சிவப்பு சார்த்தி கருட வாகனத்திலும் வீதியுலா வருதல் நடைபெறும்.
கலிவேட்டை: 8 -ஆம் திருநாளான ஆக. 30 -ஆம் தேதி அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, முத்திரிக்கிணறு அருகே கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறும். ஒன்பதாம் நாள் இரவு அய்யா அனுமன் வாகனத்திலும், 10-ஆம் நாள் இரவு இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வருதல் நடைபெறும்.
தேர் திருவிழா: 11-ஆம் திருநாளான செப். 2 -ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் இருந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும். இரவு கலைநிகழ்சியும், அன்னதானமும் நடைபெறும்.