நெல்லையில் கல்வெட்டான் குழி நீரில் மூழ்கி சென்னை மாணவர் பலி

திருநெல்வேலி அருகே கல்வெட்டான் குழியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி, சென்னை மாணவர் வெள்ளிக்கிழமை  உயிரிழந்தார். 


திருநெல்வேலி அருகே கல்வெட்டான் குழியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி, சென்னை மாணவர் வெள்ளிக்கிழமை  உயிரிழந்தார். 
சென்னை, பெருங்குளத்தைச் சேர்ந்தவர் ஐசக் வேதநாயகம். சித்த மருத்துவர். இவர், தற்போது குடும்பத்தினருடன்  சூளைமேடு இன்பராஜபுரத்தில் வசித்து வருகிறார். இவரது  மகன் கிங்ஸ்லி ஜோசப் (16). சென்னை  பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். ஐசக் வேதநாயகம், உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் திருநெல்வேலி வந்தார். 
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் கிங்ஸ்லி ஜோசப், தனது நண்பர்களுடன் உத்தமபாண்டியன்குளம் தனியார் பள்ளி பின் பகுதியில் உள்ள கல்வெட்டான் குழியில் தேங்கியுள்ள தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தார்.  அப்போது, எதிர்பாராமல்  ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்,  தண்ணீரில் மூழ்கினாராம்.
இத்தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) செல்வசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும், கடலில் முத்துகுளிக்கும் தூத்துக்குடி தொழிலாளர்களும் இணைந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரவில் கிங்ஸ்லி ஜோசப்பின் உடலை மீட்டனர்.  சிவந்திப்பட்டி போலீஸார் மாணவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com