விவசாயத்துக்கு கடல்நீரைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மேம்பட வேண்டும் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.
சுவாமிநாதன் வலியுறுத்தினார்.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னை மாநகரின் தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்தல் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது: நீர் மேலாண்மை பாதுகாப்பை உறுதி செய்தாலே தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும். நாம் அனைவரும் மழைநீர் சேமிப்பை உறுதியாகக் கடைப்பிடித்து சேமிக்க வேண்டும். விவசாயத்துக்கு கடல்நீரைப் பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதுடன் அது தொடர்பான தொழில்நுட்ப ஆராய்ச்சிகளும் மேம்பட வேண்டும். நீர் மேலாண்மை, நீர் ஆளுகை குறித்த உத்திகள் அனைத்தும் செயல்திட்டங்களாக உருப்பெற வேண்டும் என்றார்.
கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள்...: இதையடுத்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் பேசியது: சென்னை மாநகரில் 5 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவுக்கு மழைநீர் வடிகால் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மழைநீர் சேகரிப்புக்காக இதுபோன்று அதிக பொருள்செலவில் திட்டங்களை மேற்கொள்வதைக் காட்டிலும் 50 மீட்டருக்கு ஒரு மழைநீர் கட்டமைப்பை அமைத்தால் நிலத்தடி நீர் பெருகுவதுடன், பெரு வெள்ளம் ஏற்படாமல் தடுக்க முடியும்.
அதேபோன்று மத்திய அரசின் உதவியுடன் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பெரிய அளவிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைப்பதைக் காட்டிலும் கடலோரப் பகுதிகளில் சிறிய அளவிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அதிகளவில் அமைக்கலாம். இதற்கான நிதியை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் திரட்டிக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
நீர் ஆளுகை அவசியம்: மின்சாரப் பயன்பாட்டுக்கு இருப்பது போன்று நீருக்கும் நீர் ஆளுகை வகுக்க வேண்டும். அதன்படி தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்துவோரை ஊக்குவிப்பதோடு, அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகளவில் தண்ணீரைப் பயன்படுத்துவோருக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன வேளாண்மை, ஊட்டச்சத்து பிரிவு இயக்குநர் ஆர்.வி.பவானி, பேராசிரியர்கள் எல்.வெங்கடாச்சலம், வி.பி. ஆத்ரேயா, ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் உள்பட பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.