சென்னை: திருப்பூரில் விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15-இல் தேமுதிகவின் முப்பெரும் விழா நடைபெறும் என்று அவரது மனைவியும், தேமுதிக மகளிர் அணித் தலைவியுமான பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரான விஜயகாந்த் ஞாயிறன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்குழந்தைகள் விஜயகாந்திற்கு இனிப்பு ஊட்டி விட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் துணைப் பொது செயலாளர் சுதீஷ், 'ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று ஏதேனும் ஒரு மக்கள் நலத் திட்டம் தொடங்கப்பட்டு, அதனை தே.மு.தி.க. தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது' என்று தெரிவித்தார்.
அதேபோல் விஜயகாந்த் பூரண உடல் நலமுடன் இருக்கிறார் என்றும், அவரது தலைமையில் திருப்பூரில் செப்டம்பர் 15-இல் தேமுதிகவின் முப்பெரும் விழா நடைபெறும் என்றும் பிரேமலதா விஜயாகாந்த் அறிவித்தார்.