காலநிலை நெருக்கடி உணர்ந்து ஊடகங்கள் பங்காற்ற வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள் 

காலநிலை நெருக்கடி நிலையில் தங்கள் கடமை உணர்ந்து ஊடகங்கள் பங்காற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காலநிலை நெருக்கடி உணர்ந்து ஊடகங்கள் பங்காற்ற வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள் 

சென்னை: காலநிலை நெருக்கடி நிலையில் தங்கள் கடமை உணர்ந்து ஊடகங்கள் பங்காற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வூட்டும் செய்திகளை அதிக அளவில் வெளியிடுவதென அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஊடகங்கள் தீர்மானித்துள்ளன. மிகப்பெரிய ஆபத்திலிருந்து பூமியையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பன்னாட்டு அமைப்புகள் போராடி வரும் நிலையில், அதில் ஊடகங்களும் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

புவி வெப்பமயமாதல் என்றால் என்ன? அதன் தீயவிளைவுகள் என்னென்ன? அவை மனிதகுலத்தை எவ்வாறு பாதிக்கும்? அந்த தீயவிளைவுகளை தடுக்க தனிநபர்கள் முதல் அரசு வரை மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன? என்பது குறித்து பல்வேறு அறிக்கைகளில் விரிவாக விளக்கியுள்ளேன். இதுபற்றி எனது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறேன். இந்த உண்மைகளையும், தகவல்களையும் ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தால், அது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகளை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.

லண்டனில் இருந்து வெளியாகும் தி கார்டியன் இதழுடன் நியூயார்க்கில் இருந்து வெளியாகும் தி நேஷன், கொலம்பியா ஜர்னலிசம் ரிவியூ ஆகிய இதழ்கள் இணைந்து புவிவெப்பமயமாதல் குறித்த செய்திகளை அதிக அளவில் வெளியிடுவதற்காக ‘‘காலநிலை மாற்றம் குறித்த செய்திகளை வெளியிடுதல் (Covering Climate Now)’’ என்ற தலைப்பில் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளன. இத்திட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 அச்சு மற்றும் ஆன்லைன் இதழ்கள், 20 வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள், நிறுவனம் சாராத பத்திரிகையாளர்கள் 12 பேர், 4 நிறுவனங்கள் என மொத்தம் 86 ஊடக அமைப்புகள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து மக்கள் தொகைக்காட்சி இந்த திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்திருக்கிறது.

பன்னாட்டு ஊடகங்களின் இந்நிலைப்பாடு வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டத்தக்கதும் ஆகும். அதேநேரத்தில் தமிழ்நாட்டு ஊடகங்கள் இந்த விஷயத்தில் எத்தகைய பங்காற்றப் போகின்றன என்பது தான் மில்லியன் டாலர் வினா ஆகும். புவி வெப்பமயமாதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த உலகமும் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்களும், ஊடகங்களும் தங்களின் கடமையை செய்யாமல் விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

ஊடகங்கள் பரபரப்புக்காகவும், நேயர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் செய்திகளை வெளியிடுவது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால், இவற்றைக் கடந்து ஒவ்வொரு ஊடகமும் ஆத்ம திருப்திக்காக செய்திகளை வெளியிட வேண்டியது அவசியமாகும். அத்தகைய ஆத்மதிருப்தி  வழங்கும் செய்திகளாக திகழ்வது காலநிலை நெருக்கடி நிலை குறித்த செய்திகள் தான். இத்தகைய செய்திகளை அதிக அளவில் வழங்குவதுடன், இதுகுறித்த விவாதங்களையும் அதிக அளவில் நிகழ்த்த தமிழ்நாட்டு காட்சி ஊடகங்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com