காரைக்கால் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2 -ஆவது நாளாக திங்கள்கிழமை தொடர்ந்த நிலையில், முகத்துவாரம் தூர்வாருதல் தொடர்பாக ஆட்சியரை மீனவர்கள் சந்தித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக காரைக்கால் அரசலாறு முகத்துவாரம் தூர்வாரப்படாததால், படகுகள் கடலுக்குச் சென்று திரும்ப முடியவில்லை. எனவே முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், மீன்கொள்முதல் செய்யும் நிறுவனத்தினருக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கினர்.
இப்போராட்டம் திங்கள்கிழமை 2-ஆவது நாளாக தொடர்ந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த்ராஜாவை ஆட்சியரகத்தில் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பு குறித்து மீனவர்கள் கூறியது: மணல் தூர்ந்துப்போன முகத்துவாரத்தை தூர்வார விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஒரு வாரத்துக்குள் புதுச்சேரி அரசின் துறைமுகத் துறை மூலம் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக ஆட்சியர் கூறினார்.
மேலும், மீன் கொள்முதல் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டுமென கூறினோம். தூர்வாரும் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் நீடிக்கும் என்றனர்.