சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில், திங்கள்கிழமை 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது.
கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப்பணி நடைபெற்று வருகிறது. இப் பணிக்காக, தமிழக அரசு ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஜூன் 13-ஆம் தேதி அகழாய்வுப் பணி தொடங்கியது.
தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வரும் இப் பணிக்காக, 5 பேர்களின் நிலங்களில் 27 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, மண்ணால் சுட்ட சிற்பங்கள் என 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த அகழாய்வில் பல வகையான சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், திங்கள்கிழமை அகழாய்வுப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. இந்த தொட்டியானது, 3 அடி உயரம், 3 அடி நீளம், இரண்டரைஅடி அகலத்தில் செங்கற்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அகழாய்வில் தினமும் பழங்காலத்து மக்கள் பயன்படுத்திய பொருள்கள் ஒவ்வொன்றாக கிடைத்து வரும் நிலையில், கீழடி அகழாய்வு தீவிரமடைந்துள்ளது. தினமும் ஏராளமானோர் இங்கு வந்து பழங்காலப் பொருள்களை பார்வையிட்டுச் செல்கின்றனர்.