வைகோ மீதான அவதூறு வழக்கின் தீர்ப்பு, வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ ஒரு கடிதம் எழுதினார். அதில், மதிமுகவை, திமுக தலைவர் கருணாநிதி உடைக்க முயற்சிக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது. இதையடுத்து, வைகோ மீது திமுக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி கருணாநிதி விசாரித்தார். இந்த வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 26 -ஆம் தேதி பிறப்பிப்பதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு, நீதிபதி கருணாநிதி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தேவதாஸ், வைகோ உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, தீர்ப்பை நீண்ட நாட்களுக்கு ஒத்திவைக்க முடியாது என்பதால், வழக்கின் தீர்ப்பை வரும் 30-ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைப்பதாக அறிவித்தார்.