சென்னையில் மின்சாரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ், இத்தகைய பேருந்துகளை இயக்குவது புவி வெப்பமயமாதலைத் தடுக்க உதவும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரலாற்றில் முதன்முறையாக சென்னையில் மின்சாரப் பேருந்து சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்திருக்கிறார். சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும், அதன் வழியாக புவிவெப்பமயமாதலுக்கும் வாகனங்கள் கணிசமாக பங்களிப்பதாக எச்சரிக்கை குரல்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசின் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
காலநிலை நெருக்கடியைச் சமாளிப்பதற்காக சென்னையில் செயல்படுத்தப்பட வேண்டிய 20 அம்சத் திட்டத்தையும் பாமக மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதும் ஒன்று. இதைச் செயலாக்கம் கொடுக்கும் வகையில் சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவான்மியூர் வரையிலான வழித்தடத்தில் இயங்கும் மின்சாரப் பேருந்து போக்குவரத்தை அரசு தொடக்கி வைத்துள்ளது.
சென்னையில் முதல்கட்டமாக ஒரே ஒரு மின்சாரப் பேருந்து இயக்கப்படும் நிலையில், இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த இந்தத் திட்டங்கள் அனைத்தும் பெருமளவில் உதவும். மேலும், தமிழக சட்டப்பேரவையில் காலநிலை நெருக்கடி நிலை பிரகடனத்தை வெளியிட்டு நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் புவியைக் காப்பதில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடியாக திகழ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.