ஓராண்டாக பரிசீலனையா? 7 தமிழர்கள் விடுதலையை இனியும் தாமதிக்கக் கூடாது: ராமதாஸ் கோரிக்கை 

ஓராண்டாக பரிசீலனையா? 7 தமிழர்கள் விடுதலையை இனியும் தாமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஓராண்டாக பரிசீலனையா? 7 தமிழர்கள் விடுதலையை இனியும் தாமதிக்கக் கூடாது: ராமதாஸ் கோரிக்கை 

சென்னை: ஓராண்டாக பரிசீலனையா? 7 தமிழர்கள் விடுதலையை இனியும் தாமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவர்களில் ஒருவரான நளினி தொடர்ந்த  வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. மிகவும் முக்கியமான இந்த வழக்கில்  நல்ல தீர்வு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இத்தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது.

7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரைத்து இருப்பதாகவும், இந்த விஷயத்தில் தமிழக ஆளுநருக்கு நீதிமன்றம் ஆணையிட முடியாது என்றும் கூறி நளினியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருக்கிறது. இதன் மூலம் 7 தமிழர்களை மீட்பதற்கான சட்டப்போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும், இது தற்காலிகமானது தான்.

7 தமிழர்களைச் சிறைக் கொட்டடிகளில் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு தீர்மானிக்கலாம் என்றும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6&ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 7 தமிழர்களை விடுதலை செய்யும்படி தமிழக ஆளுநருக்குப் பரிந்துரைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று இரவே அந்தத் தீர்மானம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் 9-ஆம் தேதியுடன், அதாவது இன்னும் 10 நாட்களில் ஓராண்டு நிறைவடையப் போகிறது. ஆனாலும், அதன் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதும், இந்த விஷயத்தில் இனிமேல் தலையிட முடியாது என்று அரசும், நீதிமன்றங்களும் ஒதுங்கிக் கொள்வதும் நீதியை வென்றெடுப்பதற்காக இன்னும் எத்தனை காலம் தான் போராட வேண்டியிருக்குமோ? என்ற சலிப்பை ஏற்படுத்துகின்றன.

7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதும், இந்த விஷயத்தில் ஆளுநரை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது என்பதும் உண்மை தான். ஆனால், அதற்காகவே இவ்விஷயத்தில் ஆண்டுக்கணக்காக முடிவெடுக்காமல் இழுத்தடிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு விஷயத்தில் ஓராண்டாக முடிவெடுக்க  முடியாத நிலையில் ஆளுநர் இருந்தால், அது இயல்பானது அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.  அரசிடமிருந்து வரும் ஒவ்வொரு கோப்பின் மீதும் ஆளுநர் எவ்வளவு வேகத்தில் முடிவெடுக்கிறாரோ, அதே வேகத்தில் இவ்விஷயத்திலும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். ஒருவேளை தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க ஆளுநருக்கு விருப்பமில்லை என்றால் அதை அரசுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.

அவ்வாறு திருப்பி அனுப்பும் பட்சத்தில், அதே தீர்மானத்தை தமிழக அமைச்சரவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அதை ஆளுநர் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும். அதன் மூலம் 7 தமிழர் விடுதலை விரைவாகச் சாத்தியமாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com