உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனிக்கு தமிழிசை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில், 251.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார். இதையடுத்து தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்த கடலூரை சேர்ந்த தமிழக வீராங்கனை சகோதரி இளவேனில் வளரிவான் அவர்களுக்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர்.திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டரில்,
ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடும் போட்டியின் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் கடலூர் வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை. அவரது சாதனைகளும், பதக்கங்களும், அதன்வழியான பெருமைகளும் பெருக வேண்டும்!
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டரில்,
உலக அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிற தமிழக வீராங்கனை செல்வி.இளவேனில் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
பிரேசிலில் நடைபெற்ற 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்த சாதனையைப் புரிந்திருக்கும் இளவேனில், கடந்த ஆண்டு ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் தங்கம் வென்றவர்.
20 வயதிலேயே இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கும் இளவேனில், உலகளவில் இன்னும் பல சாதனைகளைப் புரிந்திட வாழ்த்துகிறேன்.