தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு: 17 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும், ஞாயிற்றுக்கிழமை (செப். 1) குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை சுமார் 17 லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்


தமிழகம் முழுவதும், ஞாயிற்றுக்கிழமை (செப். 1) குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை சுமார் 17 லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் குரூப் 14 தேர்வுக்கான அறிவிக்கை, கடந்த ஜூன் 14-இல் வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் கடந்த 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
தேர்வு மையங்கள் தயார்: குரூப் 4 தொகுதியில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில  அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகள் வருகின்றன. இவற்றில், மொத்தமாக 6 ஆயிரத்து 491 காலியிடங்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. அதில், கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 397, இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 2 ஆயிரத்து 688, தட்டச்சர் பணியிடங்கள் 1,901, சுருக்கெழுத்து தட்டச்சர் 784  என மொத்தம் 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. இந்தக் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்காக 301 தாலுகா மையங்களிலும் தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வர்களுக்கு கட்டுப்பாடுகள்: குரூப் 4 எழுத்துத் தேர்வை எழுதும் தேர்வர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செல்லிடப்பேசி மற்றும் இதர மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருள்களை வைத்திருப்போர், தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்களது வினாத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வுக்கூடத்துக்குள் பேனா மட்டுமே கொண்டு வர வேண்டும். வண்ண எழுதுகோல், பென்சில், புத்தகங்கள், குறிப்புகள், வரைபட கருவிகள், பாடப்புத்தகங்கள் ஆகியவற்றைக் கொண்டு வரக்கூடாது.
விண்ணப்பதாரர்கள் செல்லிடப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை தேர்வுக்கூடத்துக்குக் கொண்டு வரக்கூடாது. அவ்வாறு கொண்டு வந்தால் அந்தப் பொருள்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர இயலாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com