சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தோ்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முடிந்ததால் நாளை அறிவிப்பு வெளியாகலாம் என்றும், இல்லாவிட்டால் நாளை துவங்கி இந்த வாரம் கண்டிப்பாக அறிவிப்பு வெளியாகும்' என்று தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் திமுக மற்றொரு வழக்கினைத் தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.