புதுக்கோட்டை: மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அரியணை ஏறுவார் என்று புதுக்கோட்டையில் நடந்த திருமண விழா ஒன்றில் பாஜக மாநில துணைத்தலைர் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஞாயிறன்று புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன் மற்றும் பாஜக மாநில துணைத்தலைர் பி.டி.அரசகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அரசகுமார் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்து தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் பேசிய அவர் கூறியதாவது:
நான் அன்று பார்த்ததில் இருந்து இப்போது வரை ஒரே மாதிரி உடற்கட்டுடன் இருக்கும் தலைவர் ஸ்டாலின்தான். உண்மையைச் சொல்வதென்றால் எம்ஜிஆருக்கு அடுத்து தான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின்.
இப்போது யார் யாரையோ அடுத்த முதல்வர் என்கிறார்கள். அதே வார்த்தையை நாம் ஸ்டாலினுக்கும் பயன்படுத்த வேண்டாம். பல்லாண்டு காலம் அந்தப் பதவிக்கு அருகில் இருந்தும் அதை முறைகேடாக அடைய நினைக்காதவர் அவர்.
தான் ஜனநாயக வழியில் முதல்வர் ஆக வேண்டும் என்பதையே அவர் விரும்புவார். அதற்காக அவர் காத்திருக்கிறார். விரைவில் அதற்கான காலம் கனியும். ஸ்டாலின் தமிழகத்தின் அரியணை ஏறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.