சென்னை: தமிழகத்தில் பருவமழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
சனிக்கிழமை முதல் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ் அணைக்கட்டில் 10 செ.மீ. மழையும், வெட்டிக்காடில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளன. மதுரை மாவட்டம் மேலூர், திருவாதவூர், ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கீழவளவு, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் தலா 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, நெற்குணம், தெள்ளார், தேசூர், சாலவேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீடாமங்கலம் மற்றும் முத்துப்பேட்டையில் தலா 9 செ.மீ., பாண்டவையாறு தலைப்பில் 8 செ.மீ. மழை பதிவுகியுள்ளது.
அத்துடன் டிசம்பா் 1, 2 ஆகிய இரு நாள்கள் மேலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பருவமழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள் காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும், கூட்டத்தின் முடிவில் நிவாரணப் பணிகள் குறித்து முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்றும் தெரிகிறது.