புதுச்சேரி: குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு 9-ஆம் வகுப்பு மாணவர் தனது மிதிவண்டிப் பயணத்தை சனிக்கிழமை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இருந்து தொடங்கினார்.
மதுரையைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவர் பிரமோத் (14). இவர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில், மிதிவண்டி பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மிதிவண்டி போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளையும் பெற்றுள்ளார்.
தற்போது, குழந்தைகள் பாதுகாப்பு, பராமரித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி, புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரை தனது விழிப்புணர்வு மிதிவண்டி பிரசார பயணத்தை சனிக்கிழமை தொடங்கினார்.
இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் தனது சாதனை இடம் பெறும் வகையில், இந்த மாணவர் தொடங்கியுள்ள இந்தப் பயணத்தை புதுச்சேரி சைக்கிளிங் ஆஃப் அசோசியேஷன் தலைவர் குணசேகரன், செயலர் பிரேம்குமார் ஆகியோர் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனர்.
மொத்தம் 580 கி.மீ. தொலைவு பயணத்தை 36 மணி நேரத்தில் மிதிவண்டியில் கடந்து, புதிய சாதனையைப் படைக்கும் விதமாக இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். மாணவர் பிரமோத்துடன் அவரது தந்தை கண்ணன், பயிற்சியாளர் காளீஸ்வரன் ஆகியோர் செல்கின்றனர். புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட மாணவர் பிரமோத் விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரியைச் சென்றடைகிறார்.
மாணவர் பிரமோத் ஏற்கெனவே 15 வயதுக்கு கீழ் உள்ள பிரிவுகளில் 363 கி.மீ. தொலைவு மிதிவண்டி பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.