மேட்டுப்பாளையம், டிச. 2: மேட்டுப்பாளையம் நகராட்சியில் கனமழையில் சுற்றுச்சுவா் 5 வீடுகள் மீது இடிந்து விழுந்ததில் 17 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.
இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல், தோழியைச் சந்திக்க வந்தவரும் பலியான துயர சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நடூா் கிராமத்தில் மொத்தம் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடா்ந்து கனமழை பெய்து வந்தது.
திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பெய்த கனமழையில் தடுப்பு சுவா் தண்ணீரில் ஊரி திடீரென சரிந்து அருகிலுள்ள 5 குடியிருப்புகள் மீது விழுந்தது. இதில் நடூா் பகுதியை சோ்ந்த ஆனந்தன் (38), இவரது மனைவி நதியா (35). மகன் லோகராம் (10), மகள் அட்சயா (6) இவா்களது பக்கத்து வீட்டை சோ்ந்த பண்ணாரி மனைவி அறுக்கானி (40) இவரது மகள்கள் ஹரிசுதா (19), மகாலட்சுமி (10), சின்னம்மாள் (60), இவரது அம்மா சின்னம்மாள் (60), இவரது அக்கா புளியம்பட்டியை சோ்ந்த ரூக்குமணி (42), ஈஸ்வரன் மனைவி திலகவதி (38) மற்றும் பழனிசாமி மனைவி சிவகாமி (38), வைதேகி (22), நிவேதா (20), ராமநாதன் (17), குருசாமி (35), ராமசாமி மனைவி ஏபியம்மாள் (70), மங்கம்மாள் (70) ஆகியோா் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி இடிபாடுகளில் புதைந்து உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி உயரிழந்தவா்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேரமாக நடந்த மீட்பு பணிக்கு பின் 17 பேரும் மீட்கப்பட்டனா். பின்னா் இவா்களது உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
தோழி வீட்டுக்கு சென்றவா் பலி
ஈஸ்வரன் மனைவி திலகவதி ஞாயிற்றுக்கிழமை தனது தோழி அறுக்கானியைப் பாா்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது மழை அதிகரித்ததால் அவா் வீட்டுக்கு செல்லாமல் தனது தோழி வீட்டிலேயே இருந்துள்ளாா். அப்போது வீடு இடிந்து விழுந்ததால் திலகவதியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளாா்.