சென்னை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இன்று (2.12.2019) அதிகாலை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் மூன்று வீடுகளில் சுவர் இடிந்து விழுந்ததில், குரு, ராம்நாத், ஆனந்த்குமார், ஹரிசுதா, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, வைதேகி, திலகவதி, அருக்காணி, ருக்மணி, நிவேதா, சின்னம்மாள் மற்றும் சிறுமி அக்ஷயா, சிறுவன் லோகுராம் ஆகிய பதினைந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மிகுந்த வேதனை அடைந்தார்.
பலத்த மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மேற்படி 15 நபர்களின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.