குமரி, நெல்லை உட்பட 13 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, ராமநாதபுரம் உட்பட 13 மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IMD chennai
IMD chennai


சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, ராமநாதபுரம் உட்பட 13 மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் மற்றும் புதுவையில் வடக்கிழக்குப் பருவ மழை தற்போது வலுவாக உள்ளது.  இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில்  கனமழையும், 3 மாவட்டங்களில் மிகக் கனமழையும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 14 செ.மீ. மழையும், குன்னூரில் 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை - தென் தமிழக கடல் பகுதியை ஒட்டிய இடத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். மேலும் வரும் டிசம்பர் 3, 4ம் தேதிகளில்  தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும்.

கனமழையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும். டிசம்பர் 3, 4ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். 

மீனவர்களைப் பொறுத்தவரை 
மன்னார்வளைகுடா, குமரிக் கடல் பகுதி, லட்சத் தீவுப் பகுதிகள் மற்றும்  தென்மேற்கு வங்கக் கடலின் இலங்கையை ஒட்டிய கடற் பகுதிகளில் மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

வடகிழக்குப் பருவ மழையைப் பொறுத்தவரை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை பதிவான  மழையின் அளவு 40 செ.மீ. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய அளவு 36 செ.மீ. இது இயல்பை  விட 11 சதவீதம் அதிகம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com