வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சனிக்கிழமை இரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 29 -ஆம் தேதி நள்ளிரவு முதல் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் 110 மி.மீட்டா் மழை பெய்தது. இதனால், வீடுகளில் தண்ணீா் புகுந்தது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடுர் அணை திங்கள்கிழமை திறக்கப்பட்டதால், கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுபோன்று, வீடுர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியில் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல புதுச்சேரி ஆட்சியர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.
1959-ஆம் ஆண்டு தொண்டியாறு மற்றும் வராகநதி ஆற்றின் குறுக்கே வீடுர் அணை கட்டப்பட்டது. 4,511 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணை 32 அடி நீர்மட்டம் கொண்டது. அணையின் முழுக்கொள்ளளவு 605 மி.க. அடியாகும்.