17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா? தனித் தொகுதி எம்எல்ஏக்களை கேள்வி கேட்கும் பா.இரஞ்சித்!

17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா? என்று தமிழகத்தின் தனித் தொகுதி எம்எல்ஏக்களை நோக்கி இயக்குநர் பா.இரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

சென்னை: 17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா? என்று தமிழகத்தின் தனித் தொகுதி எம்எல்ஏக்களை நோக்கி இயக்குநர் பா.இரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் திங்களன்று சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், அங்கு வாசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். சுமார் 3 மணி நேரமாக நடந்த மீட்பு பணிகளுக்குப் பின் 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

இறந்த அனைவரும் அருந்ததியர் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் குறிப்பிட்ட சுற்றுச்சுவர் தீணடாமை பாகுபாடு காரணமாக கட்டப்பட்ட சுவர் என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் 17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா? என்று தமிழகத்தின் தனித் தொகுதி எம்எல்ஏக்களை நோக்கி இயக்குநர் பா.இரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதாவது:

கோவை மேட்டுபாளையம் நடூரில் பட்டியலின மக்கள் வாழும் பகுதியை ஓட்டி  சாதி உணர்வால் கட்ட பட்ட 20 அடி சுவர் தொடர் மழையால் இடிந்து 17 பேர்பலி. எத்தனையோ முறை இந்த சுவரை அகற்ற சொல்லி முறையிட்டும், அதை தட்டி கழித்து அரசும் சாதியாளர்களும் நிகழ்த்திருக்கும் கொடூர செயல்.

அதிக மழையைக் கண்டு அச்சம் அடைந்த மக்கள், மூன்று நாட்களுக்கு முன்புகூட சுவர் பாதிப்பு ஏற்படுத்தும் என மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். சுவர் கொண்ட வீட்டு உரிமையாளரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். அவர்களின் அலட்சயத்தின் விலை 17 உயிர்கள்.

போராட்டம் செய்த தமிழ்ப்புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்று  விட்டார்கள்.  சுவர் கொன்ற 17 உடல்களை புதைத்தும் விட்டார்கள். இனி நிவாரணம் கேட்டு போராட வேண்டும்.அவ்வளவு தான்...அடுத்த இறப்பு வரும் வரை காத்திருப்போம்!!!

தனித் தொகுதியில் நின்று அரசியல் அதிகாரத்தை அடைந்தவர்கள்.. தற்போது இறந்து போன 17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா என மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நீதி என்பது நிவாரணம் அல்ல.. சாதிப்பிரிவினையின் சான்றாக 17 பேரை கொன்ற சுவர் போல இனி எங்கும் சுவர்கள் இருக்கக்கூடாது என்கிற உத்திரவாதம் தேவை. ஒடுக்கப்பட்ட மக்களின் விரல் மையினால் ஆட்சியில் அமர்ந்து கொண்டிருப்பவர்களே.. உங்களின் கள்ள மௌனம் அவர்களை இன்னொரு முறை கொன்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com