சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (03.12.2019) இரண்டு விமானப் பயணிகளிடமிருந்து மொத்தம் 385 கிராம் எடையுள்ள ரூ. 15.2 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இலங்கை ஏர்லைன் விமானத்தில் சென்னை வந்தடைந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 35 வயதான ஜபருல்லா கான் என்ற நபரிடம் விசாரணை நடந்தபோது, அவர் கேள்விகளுக்கு மிகவும் பதற்றத்துடன் மழுப்பலான பதிலை அளித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, ரப்பர் போன்ற பொருளாக மாற்றப்பட்ட இரண்டு கட்டு தங்கத்தை மறைத்துக் கொண்டுவந்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
அவரது ஆசனவாய்ப் பகுதியிலிருந்து இந்த தங்கம் மீட்கப்பட்டது. இந்த ரப்பர் பொருளை பிரித்து எடுத்தபோது, 195 கிராம் எடையுள்ள ரூ. 7,70,000 மதிப்புள்ள தங்கம் கிடைத்தது.
மற்றொரு சம்பவத்தில், ஷார்ஜாவிலிருந்து ஏர்இண்டியா விமானத்தில் சென்னை வந்தடைந்த கடலூரைச் சேர்ந்த 22 வயதான பார்த்திபன் என்பவரிடம் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் வாயிலில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள முற்றிலும் நிறைவு பெறாத நிலையில் இருந்த 190 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சங்கிலி அவரது கால்சட்டைப் பையில் மறைத்துக் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவங்கள் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது.