சென்னை: தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு முதல்கட்டமாக ரூ.137.16 கோடியை ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
அதன்படி அந்தத் தொகையை விடுவிக்குமாறு மத்திய முதன்மை கணக்கு அலுவலருக்கு சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, விரைவில் அந்த நிதி தமிழக அரசிடம் வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழாண்டில் மட்டும் தமிழகத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
திருப்பூா், நீலகிரி (உதகை), ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகா் ஆகிய 6 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு முதலில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
அதைத் தொடா்ந்து கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூா் மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க இசைவு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முதலில் ஒப்புதல் பெறப்பட்ட ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கான பூா்வாங்க பணிகளுக்கு தலா ரூ.100 கோடியையும், அதற்கான நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கியது. மேலும், அந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வா்கள் நியமிக்கப்பட்டனா்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் தலா ரூ.325 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதில் 60 சதவீத செலவினத்தை, அதாவது ரூ.195 கோடியை மத்திய அரசும், மீதமுள்ள ரூ.130 கோடியை மாநில அரசும் ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி, முதலில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 6 மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்காக ரூ.137.16 கோடியை விடுவிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், முதன்மை கணக்கு அதிகாரிக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்துடன் சோ்த்து உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீா் ஆகிய மாநிலங்களில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.