சுங்கக் கட்டணம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு ராமதாஸ் கடிதம்

முதலீடு எடுக்கப்பட்ட  சுங்கச் சாவடிகளில்  சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று   மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் (கோப்புப்படம்)
பாமக நிறுவனர் ராமதாஸ் (கோப்புப்படம்)

சென்னை: முதலீடு எடுக்கப்பட்ட  சுங்கச் சாவடிகளில்  சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று   மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்,  தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், பல சுங்கச்சாலைகளுக்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட பிறகும் முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்கிறது.  45 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த பரனூரிலும், திண்டிவனத்திற்கு முன்பாக ஆத்தூரிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இச்சாலை சுங்கக்கட்டண சாலையாக அறிவிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டுமே செலவானதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுங்கச்சாலை அமைக்கப்பட்டது முதல் 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான 13 ஆண்டுகள்  ஆறு மாத காலத்தில் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ரூ.1098 கோடி சுங்கக்கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இப்போது வரை கூடுதலாக ரூ.150 கோடி வசூலிக்கப்பட்டிருக்கும். சாலை அமைக்க செலவிடப்பட்டதை விட இரு மடங்கிற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்னும் முழு கட்டணம் வசூலிப்பது ஏன்? என்ற வினாவுக்கு நெடுஞ்சாலைகள் ஆணையம் அளித்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

 தமிழகத்திலுள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அவற்றை அமைப்பதற்காக ஆன உண்மையான செலவு, இதுவரை உண்மையாக வசூலிக்கப்பட்ட சுங்கக்கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அலுவலக உயரதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆணையம் அமைத்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்; விசாரணை முடிவடையும் வரை 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளில் பராமரிப்புக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com