கோவை: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக கலைவர் ஸ்டாலினுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா? என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக கோவை வந்திருந்த முதல்வர் பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் இன்னும் 20 நாட்களில் விலை குறையும். வரத்து குறைவால் வெங்காய விலை உயர்வு பிரச்னை நாடு முழுவதும் உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயங்குகிறது, அஞ்சுகிறது. அதுதொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது மீண்டும் நீதிமன்றம் செல்கிறார் ஸ்டாலின். ஏதாவது காரணம் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது தள்ளிப்போடுவது தான் ஸ்டாலினின் திட்டம்.
நாங்கள் இப்போது கேட்கிறோம், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க ஸ்டாலினுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார். அதிமுக கூட்டணி ஒன்றாக சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெறும்.
தமிழகத்தின் கஜானா காலியாகி விட்டது போன்ற உண்மையற்ற செய்திகளை கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சொல்லி வருகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.