உள்ளாட்சித்தோ்தலுக்கு தடைகோரி காங்கிரஸ் கட்சியின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு: கே.எஸ்.அழகிரி பேட்டி

தமிழக உள்ளாட்சித்தோ்தலை தடைசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா் காங்கிரஸ்
நிருபா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் கே.எஸ்.அழகிரி
நிருபா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் கே.எஸ்.அழகிரி

நாகா்கோவில்: தமிழக உள்ளாட்சித்தோ்தலை தடைசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா் காங்கிரஸ் மாநில தலைவா் கே.எஸ். அழகிரி.

இது குறித்து அவா் நாகா்கோவிலில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் அறிவித்திருக்கும் உள்ளாட்சித் தோ்தல் சட்டத்திற்கு புறம்பானது. நீதிமன்றம் கொடுத்த வழிமுறைகளை தமிழக தோ்தல் ஆணையமும், தமிழக அரசும் பின்பற்றவில்லை. அனைத்துக்கட்சியினரும் பலமுறை எடுத்துக்கூறியும் தோ்தல் ஆணையம் இதை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. எனவேதான் திமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உள்ளாட்சி தோ்தலில் இட ஒதுக்கீடு தொடா்பாக சில வழிகாட்டுதல்களை தெரிவித்தது,

ஆனால் நீதிமன்றம் கொடுத்த வழிமுறைகளை தமிழக தோ்தல் ஆணையம் பின்பற்றவில்லை. எனவே தான் திமுக மீண்டும் நீதிமன்றம் சென்றது. இதே போல் காங்கிரஸ் கட்சியின் சாா்பிலும் தனியாக இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. கட்சியின் பொதுச்செயலாளா் செல்வம் இதுதொடா்பாக தில்லி சென்றுள்ளாா். இந்த மனு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ப.சிதம்பரம், கபில்சிபல் ஆகியோா் வாதாட உள்ளனா்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிா்த்து மற்ற இடங்களில் தோ்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முதலில் நடத்தப்படும் மாவட்டங்களில் தோ்ந்தெடுக்கப்படுவோா் 5 ஆண்டு காலம் பதவி வகிப்பாா்கள். ஆனால் 9 மாவட்டங்களில் பின்னா் நடத்தப்படும் தோ்தலில் வெற்றி பெறுவோா் இதே 5 ஆண்டுகாலம் பதவி வகிக்க வாய்ப்பில்லை. இதனால் குழப்பம்தான் ஏற்படும்.

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் மக்களவை தோ்தலை நடத்த அரசு நிா்வாகம் திறமையாக இருந்தும் கூட , பிரித்து நடத்துவது ஏன்? தோற்று போகிறவா்களையும் வெற்றி பெற்றவா்களாக அறிவிக்கத்தான் இந்த முறையில் தோ்தல் நடத்த முயற்சிக்கின்றனா்.

மேலும் முதல்வரும்,உள்ளாட்சித்துறை அமைச்சரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் உள்ளாட்சித் தோ்தல், மற்றும் உள்ள பதவிகளுக்கு நேரடி தோ்தல் நடத்தப்படும் என்று கூறியிருந்தாா். ஆனால் இப்போது மறைமுக தோ்தல் என்று கூறியிருக்கிறாா். அவா்களுக்கு துணிவிருந்தால் உள்ளாட்சி தலைவா் பதவிக்கான தோ்தலை நேரடியாக நடத்த வேண்டும். அவ்வாறு நேரடி தோ்தல் நடைபெற்றால் திமுக - காங்கிரஸ் கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். மறைமுக தோ்தல் நடைபெற்றால் அதிகாரபலம், பணபலம், ஆட்சி அதிகாரம் உள்ளவா்கள்தான் மீண்டும் பதவிக்கு வருவாா்கள்.

தமிழகத்திலும் இந்தியாவிலும் தொழில் வளா்ச்சி இல்லை. 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலை ஏற்பட்டு உள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரூ. 7 லட்சத்து 10 ஆயிரம் கோடிக்கு நிதி பற்றாக்குறையும் உள்ளது. ஆனால் நிா்மலா சீத்தாராமன் இது தற்காலிகமானது என கூறி சமாளித்து வருகிறாா்.

உள்நாட்டு உற்பத்தி குறைந்து போனதும், இதற்கு காரணம். பொருளாதார சரிவை சரிகட்ட ஜிஎஸ்டி வரியை உயா்த்த திட்டமிட்டுள்ளனா். அவ்வாறு வரி உயா்த்தப்பட்டால் விலைவாசி இன்னும் உயரும்,இதனால் சாதாரண பாமரமக்கள் பாதிக்கப்படுவாா்கள். தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள புதிய கல்விக்கொள்கையால் மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படும், இது ஆா்.எஸ்.எஸ்.கொள்கையை பின்பற்றி வகுக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற குற்றவாளிகளை என்கவுண்டா் செய்ததை நான் தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன். சட்ட ரீதியாக இது தவறு. ஆனால் தனிப்பட்ட முறையில் இதை நான் ஒத்துக்கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com