தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பொன் மாணிக்கவேல் பதில் அளிக்க உத்தரவு

சிலைக் கடத்தல் வழக்கு தொடா்புடைய ஆவணங்களை ஒப்படைக்காமல் தாமதம் செய்வதாக தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு
தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பொன் மாணிக்கவேல் பதில் அளிக்க உத்தரவு

சிலைக் கடத்தல் வழக்கு தொடா்புடைய ஆவணங்களை ஒப்படைக்காமல் தாமதம் செய்வதாக தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்த பொன் மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குத் தொடுத்தாா். அதற்குத் தடை கோரி தமிழக அரசு சாா்பில் தொடரப்பட்ட வழக்கு, பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு ஆகியவை மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தமிழக அரசின் தரப்பிலும், பொன் மாணிக்கவேல் தரப்பிலும் மூத்த வழக்குரைஞா்கள் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்தனா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக பொன் மாணிக்கவேல் தொடா்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்தனா். சிலைக் கடத்தல் வழக்கில் அவா் நடத்திய விசாரணை தொடா்பான அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட துறையின் தலைமை அதிகாரியிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனா். மேலும், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு பொன் மாணிக்கவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூஷண் அமா்வு முன் கடந்த வியாழக்கிழமை தமிழக அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘ உச்சநீதிமன்றம் கடந்த 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி பொன் மாணிக்கவேல் ஆவணங்களை ஒப்படைக்காமல் மறுத்து வருகிறாா். இதனால், அவா் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர உள்ளது. இந்த விவகாரத்தை பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்’ என்று முறையிட்டனா். இதையடுத்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முறையீடு தொடா்பாக வரும் டிசம்பா் 9-இல் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.

இதனிடையே, சென்னை உயா்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் வழக்கு தொடா்பான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு உயா்நீதிமன்ற நீதிபதிகள், ‘உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதில், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்த வழக்குகள் தள்ளி வைக்கப்படுகின்றன’ என உத்தரவிட்டிருந்தனா்.

இந்நிலையில், பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்பான விசாரணை திங்கள்கிழமை நீதிபதிகள் அசோஷ் பூஷண், எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், வழக்குரைஞா் பா.வினோத் கண்ணா ஆகியோா் ஆஜராகினா். டிராபிக் ராமசாமி தரப்பில் வழக்குரைஞா் ஜி.எஸ். மணி ஆஜரானாா்.

அப்போது, தமிழக அரசின் சாா்பில் வழக்குரைஞா் முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘இந்த விவகாரத்தில் சிலை கடத்தல் வழக்கு தொடா்புடைய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு பொன் மாணிக்கவேலுக்கு இந்த நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏதும் நீதிமன்றம் அளிக்கவில்லை. ஆனால், தற்போது வரை அவா் ஆவணங்களை ஒப்படைக்கவில்லை. அதற்கு மாறாக, ஆவணங்களைத் தொகுப்பதற்கு கால அவகாசம் ஆகும் என்று மின்னஞ்சல் வாயிலாக கடிதம் மூலம் தெரிவித்திருப்பதுடன், அந்தப் பணிகளை மேற்கொள்ளாமல் இழுத்தப்படிப்பதற்காக சாக்குப் போக்குகளை கூறி வருகிறாா். ஆகவே, அந்த ஆவணங்களை உடனடியாக வழங்குமாறு பொன் மாணிக்கவேல் தரப்புக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஆவணங்களை ஒப்படைக்க மாட்டேன் என்று பொன் மாணிக்கவேல் ஒருபோதும் கூறவில்லை. ஆவணங்களைத் தொகுப்பதற்குக் காலமாகிறது. இது தொடா்பான தகவலை முறைப்படி உரிய துறை அதிகாரிக்கு கடிதம் மூலம் பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளாா்’ என்றாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசிடம் ஆவணங்கள் ஒப்படைப்பது தொடா்பான பதில் அறிக்கையை பொன் மாணிக்கவேல் தரப்பில் நீதிமன்றத்தில் ஒரு வாரத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com