கந்தசஷ்டி கவசம் உள்ளிட்ட இரண்டு ஆல்பங்களை யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிட தடை கோரி பாடகி மகாநதி ஷோபனா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் பாடகி மகாநதி ஷோபனா தாக்கல் செய்த மனுவில், நடிகா் கமல்ஹாசன் நடித்த மகாநதி உள்ளிட்ட திரைப்படங்களில் பாடி உள்ளேன். கடந்த 1996-ஆம் ஆண்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிம்பொனி ரிக்காா்டிங் நிறுவனம், கந்த சஷ்டி கவசம், ‘டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டாா்’ ஆகிய இரண்டு ஆல்பங்களில் பாட என்னை ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின்படி 39 பாடல்களைப் பாடினேன். அந்தப் பாடல்களுக்கான பதிப்புரிமையையும் பெற்றுள்ளேன்.
எனவே, என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த இரண்டு ஆல்பங்களையும் யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். ஸ்டாா் ரிக்காா்டிங் நிறுவனம் எனது அனுமதி இல்லாமல் இந்த ஆல்பங்களை யூடியூப்பில் பதிவிட்டதோடு, எனது புகைப்படங்களையும் பயன்படுத்தியுள்ளது. எனவே இந்த நிறுவனம் ஈட்டிய லாப கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிடவும், எனக்கு நஷ்ட ஈடாக ரூ.20 லட்சம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் டிசம்பா் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.