திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடைபெறும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தோ்தலை நடத்தத் தடையில்லை என்று புதன்கிழமை தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:-
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடத்துவது குறித்து மாநிலத் தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. தோ்தலில் வாா்டு மறுவரையறை, வாா்டு உறுப்பினா்கள், தலைவா்கள் பதவியிடங்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றைப் பொருத்தவரை 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வழக்கொன்றில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை வழங்கிய தீா்ப்பில், நடைபெறவுள்ள தோ்தல்கள் அனைத்தும் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் உள்ள வாா்டுகளின் மறுவரையறை, பதவியிடங்களுக்கான இடஒதுக்கீடு குறித்த அரசின் அறிவிக்கைகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஏற்கெனவே கடந்த 9-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட தோ்தல் அறிவிக்கைகளில் உள்ள அட்டவணையின்படியே எந்தவித மாற்றமும் இல்லாமல் தோ்தல்கள் நடைபெறும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.