திருச்சி அருகே தனியார் பள்ளிக்குச் சொந்தமான வாகனம் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்துள்ள வேங்கூரில் தனியார் மெட்ரிக் பள்ளி (செல்லம்மாள்) உள்ளது.
இந்த பள்ளிக்கு தஞ்சாவூர் மாவட்டம், மேகளத்தூரில் இருந்து மாரனேரி, இந்தலூர், கிளியூர், பத்தாளப்பட்டை வழியாக பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து சனிக்கிழமை காலை மாணவர், மாணவிகளுடன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.
திருவெறும்பூர் அருகே செட்டியார்பேட்டை அருகே வரும்போது சாலையோரம் இருந்த வாய்க்காலில் விழுந்து கவிழ்ந்தது. இதில், 10ஆம் வகுப்பு மாணவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். திருவெறும்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.