காவல்துறையினர் இல்லாமல் அண்ணாமலையார் கோவில், எஸ்.பி.க்குத் தரிசன மறுப்பு காரணமா?

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோவிலில் இன்று காலையில் சில மணி நேரங்களுக்குக் காவல்துறையினர் யாரும் இல்லாததால் கோவிலில் தள்ளுமுள்ளும் பெரும் குழப்பமும் நேரிட்டது.
காவல்துறையினர் இல்லாமல் அண்ணாமலையார் கோவில், எஸ்.பி.க்குத் தரிசன மறுப்பு காரணமா?

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோவிலில் இன்று காலையில் சில மணி நேரங்களுக்குக் காவல்துறையினர் யாரும் இல்லாததால் கோவிலில் தள்ளுமுள்ளும் பெரும் குழப்பமும் நேரிட்டது. இந்த நிலைமை பக்தர்கள் மனதில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலில் மகாதீபத் திருவிழா டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளனர். 

இன்று காலை 9 மணியளவில் கோயில் உள்பிரகாரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் ஒவ்வொருவராகத் திரும்பச் சென்றுவிட்டனர். காவல்துறையினர் யாரும் இல்லை.

காவலர்கள் இல்லாமல் மூடப்பட்டிருக்கும் சோதனை மையம்
காவலர்கள் இல்லாமல் மூடப்பட்டிருக்கும் சோதனை மையம்

கோயிலின் உள்ளே கிளி கோபுரம் பகுதியில் பக்தர்கள் கொண்டுவரும் உடைமைகளை சோதிப்பதற்காக செய்ய சிறப்பு மையம் இருக்கிறது. இந்த மையத்தையும் பூட்டிவிட்டுக் காவலர்கள் சென்றுவிட்டனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எந்த சோதனையும் இல்லாமல் கோயிலுக்குள் தாராளமாகச் செல்லும் நிலை ஏற்பட்டது.

பாதுகாப்புப் பணியில் காவலர்கள் இல்லாததால், விடுமுறை தினமான இன்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்ததால், அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் கோயிலுக்குச் செல்வதும், கோயிலுக்குள் பக்தர்களை ஒழுங்குபடுத்துவதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. குழப்பம் நேரிட்டது.

விடுமுறை நாள் என்பதால் கோயிலுக்குள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் முட்டி மோதிக் கொண்டு நாலாபுறமும் இருந்து கோயிலுக்குள் வந்து கொண்டிருந்தனர். இதற்கிடையே, கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

பிற்பகல் 1.45 மணிக்குப் பிறகு காவல்துறையினர் மீண்டும் கோவிலுக்கு வரத் தொடங்கினர். பரிசோதனை மையமும் மீண்டும் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. காவலர்கள் வழக்கமான பணிகளைத் தொடங்கினர்.

காவலர்கள் பாதுகாப்புப் பணிக்கு வந்த பிறகு திறந்திருக்கும் சோதனை மையம்
காவலர்கள் பாதுகாப்புப் பணிக்கு வந்த பிறகு திறந்திருக்கும் சோதனை மையம்

இதுபற்றி விசாரித்தபோது, நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபி சக்கரவர்த்தி, சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்ததாகவும் மூலவர் அருணாச்சலேசுவரர் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகள்  உள்ளே சென்று தரிசிக்க முடியாத வகையில் மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கோயிலுக்குள் சென்று அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய சன்னதியைத் திறக்க வேண்டும் என்று காவல்துறையினர் கூறியும் ஊழியர்கள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் எரிச்சலுற்றுக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபி சக்கரவர்த்தி, மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மூலவர் சன்னதியின் முன்பு நின்று கும்பிட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று கோவில் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே இன்று காவல்துறையினர் விலக்கப்பட்டிருக்கலாம் என்றும் கோவில் வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com