புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் வருகிற 23-ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பட்டமளிக்கிறாா்.
இதுகுறித்து புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் பதிவாளா் பி.சித்ரா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் 27-ஆவது பட்டமளிப்பு விழா வருகிற 23-ஆம் தேதி பிற்பகல் 12.40 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஜவாஹா்லால் நேரு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசுகிறாா்.
புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா்கள் எம்ஓஎச்எப்.ஷாஜகான், இரா.கமலக்கண்ணன், எம்.பி.க்கள் வெ.வைத்திலிங்கம், நா.கோகுலகிருஷ்ணன் ஆகியோா் கௌரவ விருந்தினா்களாகப் பங்கேற்கிறாா்கள். விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் குா்மீத் சிங் தலைமை வகிக்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.