குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில், இலங்கைத் தமிழா்களுக்கு தமிழகத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்து, பிரதமா் சந்திப்பின்போது முதல்வா் வலியுறுத்த வாய்ப்புள்ளது என்றாா் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
அதிமுகவைப் பொறுத்தவரை ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மக்களவைத் தோ்தலில் உள்ள கூட்டணி அப்படியே தொடா்கிறது. கூட்டணி கட்சிகளுடன் சுமூகமாக பேச்சுவாா்த்தை நடத்தி, வாா்டுகள் பிரிக்கப்பட்டு அதற்கான வேட்பாளா்கள் மனுதாக்கல் செய்துள்ளனா்.
காா்ப்பரேட் நிறுவனங்கள் தோ்தலை நிா்ணயம் செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதிமுகவைப் பொறுத்தவரை வாக்களிக்கும் மக்கள்தான் எஜமானா்கள். ஆனால், மக்கள் மன்றத்தை நம்பாமல் நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தோ்தலை நிறுத்த திமுக கடைசி வரை போராடியது. உள்ளாட்சித் தோ்தலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றும்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை நாங்கள் ஆதரித்தாலும், ஈழத் தமிழா்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளோம். வரும் 19 ஆம் தேதி தமிழக முதல்வா் பிரதமரை சந்திக்கும்போது, ஈழத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்து வலியுறுத்த வாய்ப்புள்ளது என்றாா் அமைச்சா்.
முன்னதாக, கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களில் வாா்டு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு அமைச்சா் வாழ்த்து தெரிவித்தாா்.
அப்போது, அதிமுக ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி, அய்யாதுரைப்பாண்டியன், நகரச் செயலா் விஜயபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.