கோவை மதுக்கரை அருகே கணவன், மனைவி சண்டையால் மனமுடைந்த மகள் கிணற்றில் குதித்து தற்கொலை, காப்பற்ற சென்ற மகனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கிணத்துக்கடவு ஜமீன் காளியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (45). இவரது மனைவி வேலுமணி. இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக மதுக்கரை அருகே உள்ள வழுக்கப்பாறை பகுதியில் செந்தில்குமார் என்பவரது தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வேலைப்பார்த்து வருகின்றனர்.
2 பெண்களை திருமணம் செய்து கொடுத்த நிலையில், இரண்டு மகன், ஒரு மகளுடன் தோட்ட வேலை செய்து வந்தனர். முத்துச்சாமி, வேலுமணி தம்பதி அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணியளவில் வழக்கம் போல் இருவரும் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மகள் சித்ரா (17) இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், தொடர்ந்து இருவரும் சண்டையிட்டதால் மனமுடைந்த சித்ரா தோட்டத்தில் இருந்த கிணற்றில் குதித்தாகத் தெரிகிறது. இதைப் பார்த்த அவரது அண்ணன் அருண்குமார் (25), சித்ராவைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.
ஆனாலும் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி சண்டையால் மகன், மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.