சென்னை: தமிழகத்தில், நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவங்கங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம், புதுவை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்கள், குமரிக் கடல் பகுதியில் காற்றானது மணிக்கு 45 - 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால், அடுத்த 24 மணி நேரத்துக்கு குமரிக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.