சென்னை: சென்னை காசிமேட்டில் போதை பழக்கத்தினால் தம்பி தற்கொலை செய்துக் கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அண்ணனும் சோகத்தில் தற்கொலை செய்துக் கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
காசிமேடு காசிதோட்டம், 2 வது தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர்களின் மகன் இருதயராஜ் (28), ஆரோக்கிய ஆகாஷ் (23) ஆவார்கள். இதில் இருதயராஜ் பி.டெக். படித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆரோக்கிய ஆகாஷ், பி.இ.படித்துவிட்டு மென்பொருள் பொறியாளராக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஆரோக்கிய ஆகாஷ் சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாக இருந்து வந்தார். இந்நிலையில் ஆகாஷ், தனது நண்பர்களுக்கு திங்கள்கிழமை ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், ஆகாஷ் தொடர்புக் கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களால் தொடர்புக் கொள்ள முடியவில்லை.
இதையடுத்து அவர்கள், இருதயராஜூக்கு ஆகாஷ் தற்கொலை குறித்த தகவலை தெரிவித்தனர். வீட்டின் மூன்றாவது தளத்தில் உள்ள ஆகாஷ் அறைக்கு இருதயராஜ் சென்றார். ஆனால் அதற்குள் ஆகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இருதயராஜ் அழுகை சத்ததைக் கேட்டு அப் பகுதி மக்கள், அங்கு விரைந்து வந்தனர். மேலும் தகவலறிந்த போலீஸார் ஆகாஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிணவறை வெகுநேரம் இருதயராஜ் அழுதபடி நின்றுக் கொண்டிருந்தாராம். இந்நிலையில் திடீரென அவர், அங்கிருந்து காணாமல் சென்றுள்ளார்.
அதேவேளையில் வீட்டுக்கு வந்த இருதயராஜ், தனது தம்பி ஆகாஷ் தூக்கிட்ட அறைக்கு சென்று, அதே துணியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் பேதிர்ச்சியடைந்தனர். தம்பி இறந்த சோகத்தில் அண்ணனும் தற்கொலை செய்துக் கொண்டது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.