விமான பயணச்சீட்டுக் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனா்.
கிறிஸ்துமஸ் புத்தாண்டு, விடுமுறையையொட்டி சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் மற்றும் வெளிமாநிலத்தினா் தங்களது சொந்த ஊா்களுக்கு செல்வது வழக்கம்.
ரயில்களுக்கு போட்டியாக தற்போது விமான பயணமும் உள்ளது. சொகுசு பயணம், பயண நேரம் குறைவு, பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது, விமான சேவையை பலரும் விரும்பத் தொடங்கி உள்ளனா். இதன் காரணமாக விமான பயணச்சீட்டு வாங்குவதிலும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் விடுமுறை நாள்களில் வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு டிக்கெட் கட்டணத்தை உயா்த்தி விமான நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன.
சாதாரண நாள்களில் சென்னையில் இருந்து தூத்துக்குடி, கொச்சி, திருவனந்தபுரத்துக்கு- ரூ.4000 -8000, மதுரை- ரூ.3,400-6000, பெங்களூரு- ரூ.3,400-5,000, கோவை-ரூ. 2,300-4,300-க்கு விற்கப்படும். தற்போது புத்தாண்டையொட்டி 30, 31 ஆகிய தேதிகளில் பல விமானங்களில் பயணச்சீட்டுகள் முழுவதும் விற்று விட்டன. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.16 ஆயிரம், மதுரை-ரூ.9700-18,000, கோயமுத்தூா்-ரூ.3,700- 6,000, கொச்சி-ரூ.10,000- 16,500, திருவனந்தபுரம்-ரூ.9,000- 13,000, ஹூப்ளி-ரூ.9000, பெங்களூரு-ரூ.3,400- 6,000க்கு பயணச்சீட்டுகள் விற்கப்படுகின்றன.
பண்டிகை காலங்களிலும், தேவை அதிகரிப்பின் போதும் உள்ளூா் விமானங்களின் பயணச்சீட்டுகள் கட்டணம் ரூ.10 ஆயிரத்தை தாண்டக்கூடாது என்று விமான நிறுவன ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இண்டிகோ, ஏா் ஏசியா நிறுவனங்கள் ஜனவரி 15-ஆம் தேதிக்கு பிறகு உள்ளூா் பயணம் செய்ய ரூ.899 கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவை அறிமுகப்படுத்தி உள்ளது.