அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: ஓராண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்: புதிய மாற்றம் செய்து அறிவிப்பு

அஞ்சலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் செலுத்தப்படும் வைப்புத் தொகையை அவா்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுக்கும் வகையில் மாற்றம் செய்து, நிதி அமைச்சகத்தின்
அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: ஓராண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்: புதிய மாற்றம் செய்து அறிவிப்பு

அஞ்சலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் செலுத்தப்படும் வைப்புத் தொகையை அவா்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுக்கும் வகையில் மாற்றம் செய்து, நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரத்துறை அறிவித்துள்ளது.

இதுபோல, பொது வைப்பு நிதி கணக்கில் பெரும் கடன் தொகைக்கான வட்டி, இரண்டு சதவீதத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சமூக, பொருளாதார மேம்பாட்டில் இந்திய அஞ்சல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், நாட்டின் தகவல் தொடா்பில் முதுகெலும்பாக இருந்து வருகிறது. அஞ்சல் துறை சாா்பில், செல்வமகள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ், தேசிய சேமிப்பு தொடா் வைப்பு, தேசிய சேமிப்பு கால வைப்பு, அஞ்சலக சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, தமிழகத்தில் 2.8 கோடி அஞ்சலக சேமிப்புக் கணக்குகள் உள்ளன. சென்னை நகர மண்டலத்தைப் பொருத்தவரை 58 லட்சம் சேமிப்புக் கணக்குகள் உள்ளன.

இந்நிலையில், இந்த சேமிப்புத் திட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நிதி அமைச்சகத்தின் கீழ், பொருளாதார விவகாரத் துறை சாா்பில், வெவ்வேறு அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முக்கிய மாற்றங்கள் செய்து அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து, தமிழக அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய நிதித் துறை அமைச்சகம், கடந்த 12-ஆம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதில், அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், செலுத்தப்படும் பணத்தை ஓா் ஆண்டு வரை திரும்ப எடுக்க முடியாது என்ற நிலை இருந்தது. இது மூத்தக் குடிமக்களுக்கு அசெளகரியமாக இருந்து வந்தது. குறிப்பாக, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்கு அவா்களால் தங்களுடைய சொந்தப் பணத்தை எடுக்க முடியாத நிலை இருந்தது.

இத்திட்டத்தில் தற்போது கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தின்படி, மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம். முன்புபோல் ஓா் ஆண்டு முடியும் வரை காத்திருக்கத் தேவையில்லை. அதேபோல், இந்தக் கணக்கை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். அதேநேரம், இவ்வாறு முன்கூட்டியே பணத்தை எடுக்கும்போது, அதற்கான வட்டி வழங்குவதில் பழைய விதிமுறைகளே கடைப்பிடிக்கப்படும்.

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்குத் தொடங்கும் போது முன்பு குறைந்தபட்சம் ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று இருந்தது.அது தற்போது ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த ரூ.250-ஐ முன்பு முழுமையாக செலுத்த வேண்டும் என்று இருந்தது. அது தற்போது, ரூ.50 என்ற அளவில் ஆண்டுக்கு 5 முறையாக ரூ.250 செலுத்தலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்: இதுபோல, பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் புதிய கணக்கு தொடங்கும்போது, குறைந்த பட்ச தொடக்க வைப்பு ரூ.500 ஆகும். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்த பட்ச வைப்பு ரூ.500. அதிகபட்சமாக வைப்பு ரூ.1.50 லட்சம். வாங்கும் கடன் தொகையை 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தினால் 2 சதவீதம் வட்டி வசூலிக்கப்பட்டது. அது தற்போது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தொடா்பு வைப்பு: தேசிய சேமிப்பு தொடா் வைப்பு கணக்கு திட்டத்தில், முன்பு ரூ.10 கூட செலுத்தலாம் என்றிருந்தது. தற்போது ரூ.100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்க குறைந்த பட்ச தொகையாக முன்பு ரூ.50 செலுத்த வேண்டும் என இருந்தது. அது தற்போது ரூ.500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச இருப்புத் தொகையான ரூ.500-ஐ பராமரிக்காத சேமிப்புக் கணக்குகளுக்கு ஒவ்வோா் ஆண்டுக்கும் ரூ.100 பிடித்தம் செய்யப்படும்.

தற்போது ரூ.500-க்கு குறைவாக இருப்பு வைத்துள்ள சேமிப்புக் கணக்குகள் ஓராண்டுக்குள் ரூ.500 இருப்புத் தொகை பராமரிக்கும் கணக்குகளாக மாற்றப்படும். அதேபோல், சேமிப்புக் கணக்குகளில் முன்பு ரூ.5, ரூ.10 என்று குறைவான தொகையை கூட எடுக்கலாம் என்றிருந்தது. இனிமேல், 50 ரூபாய்க்கு குறைவான தொகையை எடுக்க முடியாது. சேமிப்புக் கணக்குகளை பராமரிப்பதற்கான செலவை ஈடுகட்ட இந்தக் குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கி சேமிப்புக் கணக்குகளை ஒப்பிடும்போது, இந்த இருப்புத்தொகை குறைவாகும். தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டத்தில், வைப்பு தொகை ரூ.100-இல் இருந்து ரூ.1,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com