சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நடைபெறும் அசம்பாவிதங்களைத் தடுக்க சென்னையில் பாதுகாப்பு பணியில் 15, 000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
எதிர்வரும் 2020-ஆம் ஆண்டைக் கொண்டாட சென்னை நகரம் உற்சாகமாகத் தயாராகி வருகிறது. பல்வேறு நட்சத்திர விடுதிகளில் இதற்கென மிகப்பெரிய விருந்துகள் மற்றும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம் இந்தக் கொண்டாட்ட செயல்பாடுகளுக்கு போலீசார் கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நடைபெறும் அசம்பாவிதங்களைத் தடுக்க சென்னையில் பாதுகாப்பு பணியில் 15, 000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்களைத் தவிர்க்க சென்னையில் 15,000போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் உள்ளிட்ட 368இடங்களில் வாகனத் தணிக்கைக்கு என சிறப்புக் குழுக்கள் அமைகப்பட்டுள்ளன.
மெரினா,காமராஜர் சாலையில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு, அங்கெல்லாம் போக்குவரத்து ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
அத்துடன் செவ்வாய் இரவு முதல் காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் எலியட்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.