உசிலம்பட்டி அருகே வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த கும்பலை போலீஸார் தடியடி நடத்தி வெளியேற்றினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் வாக்கு சேகரிப்பு செய்வதாக புகார் வந்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையே அதிகாரிகள் ஆய்வு செய்த வாக்குச்சாவடிக்கு எதிரே உள்ள மற்றொரு வாக்குச்சாவடியின் வளாகத்துக்குள் வாக்கு சேகரிப்பு குறித்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்புக்கும் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான அதிரடிப் படையினர் அந்த வாக்குச்சாவடிக்கு சென்று அத்துமீறி நுழைந்த கும்பலை தடியடி நடத்தி வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.